மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி

பேரா. சாமுவேல் சுதானந்தா
விளக்க வடிவு

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 232
விலை ரூ. 200


சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும் வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல, வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது; எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத்தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுவன.

பேரா. சாமுவேல் சுதானந்தா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின், பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள சுதானந்தா, தற்சமயம் நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார். இவரது முந்தைய நூல் ‘ஆட்டமும் அமைப்பும்: ஒரு நாட்டுப்புற நிகழ்கலை பற்றிய ஆய்வு.’