பறவைகளும் சிறகுகளும்

பாஸ்கர்சக்தி
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 152
விலை ரூ. 110

விதவிதமான குணங்களையுடைய சுவாரஸ்யமான கிராமத்துப் பெண்கள் இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கிறார்கள். கண்ணீரும் சிரிப்பும் குதூகலமும் அவலமும் நம்பிக்கையும் உழைப்பும் கொண்ட பெண்கள். இவர்கள் அனைவரும் பாஸ்கர்சக்தியின் பிள்ளைப் பிராயத்தில் அவரைச் சுற்றிலும் நடமாடியவர்கள். இயற்கையோடு நாள்தோறும் உறவாடும் பேறுபெற்றவர்கள். பாஸ்கர்சக்தி நினைவுகளில் அங்கங்கே தங்கி இருந்தவர்கள், ஞாபக அடுக்கிலிருந்து மேலெழும்பி, உண்மையும் புனைவும் சரிவிகிதத்தில் கலந்த இக்கதைகளில் ‘பறவைகளாகஉருப்பெற்றிருக்கிறார்கள்.

இன்னொரு பகுதி, ‘சிறகுகள்’. . .  மூன்றாவது முறையாக ஞாநி கொண்டுவந்த ‘தீம்தரிகிட இதழில் தொடராக வெளிவந்ததின் தொகுப்பு. இவையும் அனுபவங்களே. ஆனால், தனக்கு நேர்ந்த அனுபவங்களைத் துளியும் கற்பனை கலக்காமல் எழுதியுள்ளார் பாஸ்கர்சக்தி. “நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால், உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்றவேண்டும். இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகி விடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்யராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பு. ‘தீம்தரிகிட இதழில் வெளியாகும் போதே வரவேற்பைப் பெற்றவை.

நிழல்முற்றத்து நினைவுகள்


பெருமாள்முருகன்
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 192
விலை ரூ. 130

தமிழக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சினிமாக் கொட்டகை, அதில் பணிபுரிபவர்கள், படம் பார்ப்பவர்கள், செயல்முறைகள் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு அற்புதமான ஆவணம் இந்த நூல். இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வெகுஜன அனுபவங்களில் முக்கியமானவை வறுமையும் சாதிப் பாகுபாடும். இவற்றில் சிக்கியிருந்த மக்களிடம் மிகுந்த பரிவுடன் ஊடாடிய கலைச்சாதனமாகத் தமிழ் வெகுஜன சினிமா இருந்தது. எந்த மானுட மாண்பு வறுமையையும் சாதிப் பாகுபாட்டையும் கடந்து உறவுகளைச் சாத்தியமாக்கியதோ, அந்தக் கலாசார ஆற்றலில் இருந்துதான் வெகுஜன சினிமா தன் செயல்தளத்தை உருவாக்கிக்கொண்டது. இந்த நூல் அதற்கு சாட்சி.

சுயவரலாற்றுத்தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்கும் பெருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணமாகும். இந்த நூல் முழுவதும் அவர் இருக்கிறார். ஆனால், அவர் கவனப்படுத்திய எண்ணற்ற விஷயங்களில் கலந்து பரவியிருக்கிறார் என்பதுடன் அவற்றால் உருவாக்கப்பட்ட சுயத்தைக் கொண்டவராக இருக்கிறார். சுய வரலாற்று எழுத்துக்களை மேற்கொள்ளும் யாருக்கும் இதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதுஇந்நூலில் பெருமாள்முருகன் கோட்பாட்டாக்கம் செய்யவில்லை; எதையும் நிறுவவில்லை. நினைவுகளின் அடிப்படையில் அனுபவித்ததையும் உணர்ந்ததையும் கூறியிருக்கிறார். இதில் வெளிப்படும் உலகமும் மானுட உறவுகளும் அசாதாரண முக்கியத்துவத்தை இந்த நூலுக்கு வழங்குகின்றன.

ராஜன் குறை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

இளங்கோ
சிறுகதை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 152
விலை ரூ. 110

ஈழத்து இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர் இளங்கோ. ஈழப் போராட்ட காலங்களில், சென்ற திசையெங்கும் யுத்தம் தொடர்ந்து விரட்ட, உள்நாட்டிலேயே ஊர் ஊராக இடம்பெயர்ந்து அகதியாக அலைந்தவர். தன் பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். இக் காலகட்ட அனுபவங்கள்தான் இவரது படைப்புகளின் களம். போர் அவலங்களினதும் புலம்பெயர் வாழ்வின் அலைக்கழிதல்களினதும் மௌன சாட்சியமாய் விளங்கும் இக்கதைகளில் சாவு இடைவிடாது தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. வாழ்வுக்கும் சாவுக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகின்றது. ஆனாலும், வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்காமல் மரணத்திற்குள் வாழ்தலையும் பேசுகின்றன. காதலும் மகிழ்ச்சியும் துயரமும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து நகர்கின்றன.
தாய் நாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய வாழ்வுக்குள் திணிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட புலம்பெயர் வாழ்வில், புகலிடக் கலாசார அழுத்தத்தின் ஆழத்தில், சொந்த பண்பாடு உரையாடலாய்க் குவிந்து கிடக்கிறது என்பதற்கு இக்கதைகளும் சாட்சி.

விடுபூக்கள்

தொ.பரமசிவன்
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 112
விலை ரூ. 75


திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர், தொ.பரமசிவன். கலாசாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். மாலை கட்டியபின் எஞ்சிய பூக்களை த் திருநெல்வேலி பகுதியில் விடுபூக்கள் என்பார்கள். இந்நூற் கட்டுரைகள் அனைத்தும் விடுபூக்கள்தான். இதுவரை வெளியாகியுள்ள தொ.ப. புத்தகங்களில் இடம்பெறாமல் விடுபட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எச்சங்களாகவும் மிச்சங்களாகவும் சிதறிக்கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை எடுத்துரைத்து வரும் தொ..வின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கின்றது. தமிழ்ச் சமூக வாழ்வியலைக் கருத்தியல் நிலையில் நினைவுபடுத்தும் இக்கட்டுரைகள் அதன் அடிப்படை அரசியலைக் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. சிதம்பரம் கோயிலைப் பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? என்பன போன்ற நுட்பமான பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடையளிக்கின்றது. மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இக்கட்டுரைகள் வழங்கும்.