பறவைகளும் சிறகுகளும்

பாஸ்கர்சக்தி
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 152
விலை ரூ. 110

விதவிதமான குணங்களையுடைய சுவாரஸ்யமான கிராமத்துப் பெண்கள் இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கிறார்கள். கண்ணீரும் சிரிப்பும் குதூகலமும் அவலமும் நம்பிக்கையும் உழைப்பும் கொண்ட பெண்கள். இவர்கள் அனைவரும் பாஸ்கர்சக்தியின் பிள்ளைப் பிராயத்தில் அவரைச் சுற்றிலும் நடமாடியவர்கள். இயற்கையோடு நாள்தோறும் உறவாடும் பேறுபெற்றவர்கள். பாஸ்கர்சக்தி நினைவுகளில் அங்கங்கே தங்கி இருந்தவர்கள், ஞாபக அடுக்கிலிருந்து மேலெழும்பி, உண்மையும் புனைவும் சரிவிகிதத்தில் கலந்த இக்கதைகளில் ‘பறவைகளாகஉருப்பெற்றிருக்கிறார்கள்.

இன்னொரு பகுதி, ‘சிறகுகள்’. . .  மூன்றாவது முறையாக ஞாநி கொண்டுவந்த ‘தீம்தரிகிட இதழில் தொடராக வெளிவந்ததின் தொகுப்பு. இவையும் அனுபவங்களே. ஆனால், தனக்கு நேர்ந்த அனுபவங்களைத் துளியும் கற்பனை கலக்காமல் எழுதியுள்ளார் பாஸ்கர்சக்தி. “நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால், உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்றவேண்டும். இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகி விடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்யராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பு. ‘தீம்தரிகிட இதழில் வெளியாகும் போதே வரவேற்பைப் பெற்றவை.